கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும், இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் (H.E Masood Imad) அவர்களுக்கும் இடையிலான சுமூகமான சந்திப்பொன்று செப்டம்பர் 8ம் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் கடற்றொழில் துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள் மற்றும் பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் திரு. எச்.எஸ். ஹதுருசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்து சமுத்திரத்தின் அயல் தீவு நாடுகளாக இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த பிரதி அமைச்சரும் உயர்ஸ்தானிகரும், கடற்றொழில் துறையில் பரஸ்பர நன்மைகளைப் பயக்கும் பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடினர்.
நிலையான கடற்றொழில் முகாமைத்துவம்: இந்து சமுத்திரத்தில் இரு நாடுகளுக்கும் பொதுவான மீன் வளங்களை, குறிப்பாக சூரை (Tuna) போன்ற வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் அது தொடர்பான தரவுகளைப் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்தனர்.
வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்: இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையில் கடற்றொழில் உற்பத்திகளின் வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் மாலைத்தீவின் கடற்றொழில் துறையில் இலங்கை முதலீட்டாளர்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இரு நாடுகளினதும் கடற்றொழில் துறையின் மேம்பாட்டிற்காக எதிர்காலத்திலும் இணைந்து செயற்படுவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் வெளியிட்டதுடன், இச்சந்திப்பு மிகவும் சுமூகமாக நிறைவடைந்தது.









