இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் 91வது புதிய CeyFish விற்பனை நிலையம், இன்று (ஜூலை 22) களுத்துறை மாவட்டத்தில் வாத்துவை, புகையிரத வீதியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. 
இந்த நிகழ்வில் பிரதேச அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே. மார்க் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், பதப்படுத்தப்பட்ட மீன்களைப் பொதுமக்களுக்கு இலகுவாகக் கிடைக்கும் விலையில் வழங்குவதே கூட்டுத்தாபனத்தின் நோக்கம் என்றும், அதன்படி 300 கிராம் மற்றும் 400 கிராம் பொதிகளாக "வெக்குயும் பொதி" செய்து சதொச (Sathosa) ஊடாக நாடு முழுவதும் விநியோகிப்பதாகவும் தெரிவித்தார்.
கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு 20 பிரதான நிர்வாக மாவட்டங்களின் கீழ் பிரதேச அலுவலகங்கள் அமைந்துள்ளன, அவற்றுடன் 90 விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன. இன்று திறக்கப்பட்ட வாத்துவை விற்பனை நிலையம் 91வது CeyFish விற்பனை நிலையம் என்றும், மேலும் 9 விற்பனை நிலையங்கள் எதிர்காலத்தில் திறக்கப்படவுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மீனவர்களுக்கு நியாயமான விலையை வழங்கி, மிகவும் சுகாதாரமான முறையில் மீன்களை கொண்டு சென்று, நாட்டின் உட்பகுதிக்குள் கொண்டு சென்று, ஒவ்வொரு குடிமகனும் நியாயமான விலையில் பெறக்கூடிய வகையில் விநியோகிப்பதே கூட்டுத்தாபனத்தின் பிரதான நோக்கமாகும். இது அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு கொள்கைக்குப் பெரும் ஆதரவை வழங்குகிறது என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் மார்க் வலியுறுத்தினார். புரதம் நிறைந்த மீன் உணவு, போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் ஒரு சத்தான உணவாக முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டுத்தாபனம் வழங்கும் 300 கிராம் மற்றும் 400 கிராம் பொதிகள் நுகர்வோருக்கு குறைந்த விலையில் மீன்களை வாங்க வழியமைக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அனைத்து விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் மீன்களின் தரம் குறித்து கட்டுப்பாட்டை மேற்கொள்வதாக தலைவர் வலியுறுத்தினார். “நல்ல பொருட்கள் மலிவானவை அல்ல, மலிவான பொருட்கள் நல்லவை அல்ல” என்ற சீனப் பழமொழியை மேற்கோள் காட்டி, கூட்டுத்தாபனம் ஒருபோதும் குறைந்த தரமான மீன்களை வழங்குவதில்லை என்றும், அனைத்து மீன்களும் புதியதாகவும், சிறந்த தரத்திலும் உள்ளன என்றும் விளக்கினார். வைத்தியசாலைகள், துறைமுக அதிகார சபை, சிறைச்சாலைகள் மற்றும் கடற்படை போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு மீன் வழங்குவதாகவும், இது கூட்டுத்தாபனத்தின் மீன் உற்பத்திகளின் தரம் குறித்து அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
                                          




 
						