en banner

Trinco District Committee 8கொட்பே (Cod Bay) கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி மற்றும் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதி அமைச்சர் ரத்ன கமகே நடவடிக்கை

திருகோணமலை மாவட்ட மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் விசேட மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (24) திருகோணமலையில் நடைபெற்றது. இது 2024 ஜூன் மாதம் நடைபெற்ற முதலாவது கூட்டத்தின் முன்னேற்ற மீளாய்வாகவும் அமைந்தது.

மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் சுமார் 50 மீனவர் சங்கப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:


* காணிப் பிரச்சினைகளைத் தீர்த்தல்: வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்களின் கீழுள்ள காணிகளை மீன்பிடித் தேவைகளுக்காகப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் இறால் இனப்பெருக்கத் திட்டத்திற்குத் தேவையான காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, காணி மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


* தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள்: Push nets, கூட்டு வலை, டைனமைட் பாவனை மற்றும் கொக்கிளாய் வாவியில் இடம்பெறும் முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உடனடிப் பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு கடற்றொழில் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வளங்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதச் செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பிரதி அமைச்சர் மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார்.


* கொட்பே மற்றும் குருநகர் அபிவிருத்திக்கு உலக வங்கியின் உதவி: திருகோணமலை கொட்பே மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் உலக வங்கித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. கபில பமுனுஆராச்சி அவர்கள் இங்கு தெரிவித்தார். கொட்பே துறைமுக அபிவிருத்திக்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்படவுள்ளதாகவும், அதன் கீழ் 300 மீற்றர் புதிய இறங்குதுறை நிர்மாணம், நாளாந்தம் 10 தொன் கொள்ளளவு கொண்ட நவீன மீன் பதப்படுத்தும் நிலையம் (Fish Processing Plant) ஒன்றை ஸ்தாபித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


* கரைவலைக் கைத்தொழில்: கரைவலைக் கைத்தொழில் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாரா (NARA) நிறுவனத்தினால் விஞ்ஞான ரீதியான ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

மீனவர் சங்கங்களைப் பலப்படுத்துவதற்காக விசேட பயிற்சிப் பாடநெறித் தொடரொன்று இவ்வருடம் முன்னெடுக்கப்படும் என தேசிய மீனவர் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் அஜந்த குமார அவர்கள் இங்கு குறிப்பிட்டார்.

அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என வலியுறுத்திய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, சாதகமான தீர்வுகளுக்காக அமைச்சின் முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) என். சிவலிங்கம், இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கபில பமுனுஆராச்சி, பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எச்.எஸ். ஹதுரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Trinco District Committee 7

Trinco District Committee 4

Trinco District Committee 6

சமீபத்திய செய்திகள்

Youtube