தென் மாகாண மீனவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஹிக்கடுவ பிரதேச மீனவ சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உயிர் காக்கும் அங்கிகள் (Life Jackets) மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் கடந்த மே 15ஆம் திகதி ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் மீனவ சமூகத்தின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.
மேலும், கடல் பயணங்களின் போது ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதன் ஊடாக மிகவும் பாதுகாப்பான தொழில் சூழலை உருவாக்குவதற்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டமை பெரும் பக்கபலமாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமுகத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிலவும் மோசமான வானிலை நிலவரங்களின் போதும், முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மீனவர்கள் தங்களின் பணியில் ஈடுபடுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்த நிகழ்வில் ஹிக்கடுவ நகர சபையின் தவிசாளர் யசஸ்வின் கொடகந்த, ஹிக்கடுவ நகர சபையின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் கலந்துகொண்டனர்.








