"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின்கீழ், கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள சுழியோடிகள் எதிர்கொள்ளும் தொழில்சார் அபாயங்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் அண்மையில் (07) கற்பிட்டியில் நடைபெற்றது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் இந்த காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிற்துறையில் மிகவும் அவதானமிக்க மற்றும் ஆபத்தான தொழிலில் ஈடுபட்டுள்ள சுழியோடிகளுக்குத் தொழில் ரீதியாக ஏற்படும் விபத்துகளின் போது நிவாரணம் வழங்குவதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குவம் இதன் பிரதான நோக்கமாகும்.
கற்பிட்டி, குறிஞ்சாம்பிட்டி, சீ கிரீன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெப்னி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கருத்துரைத்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே; இதுவரை காலம் முறையான காப்புறுதி வழங்கப்படாத கடற்றொழில் சுழியோடிகளின் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் மதிப்பினை வழங்குவது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், தொழில்சார் அபாயங்களை முகாமைத்துவம் செய்து மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி, பணிப்பாளர் நாயகம் கெலும் களுஆராச்சி, பிரதிப் பணிப்பாளர் சி.கேமரத்ன மற்றும் அகில இலங்கை சுழியோடிகள் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் ஜகத் பிரீதிகுமார உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பெருமளவான சுழியோடிகள் கலந்துகொண்டனர்.












