நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது நிர்வாக அமைச்சினால் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் துறையானது 24 மணித்தியாலங்களும் இயங்கும் ஒரு துறையாக இருப்பதால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள தரக்கட்டுப்பாட்டு உப அலுவலகம், அனைத்து துறைமுக செயற்பாட்டு அலுவலகங்கள், வானொலி தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் கலன் கண்காணிப்பு அலகு (VMS) என்பன வழமை போன்று இயங்கும். இதன் மூலம் கடலில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், கலன் உரிமையாளர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் எவ்வித இடையூறுமின்றி தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசாந்த கஹவத்த இது குறித்துத் தெரிவிக்கையில்:
"அரச விடுமுறைக் காலப்பகுதியிலும் கடற்றொழில் துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அத்தியாவசிய பணிகளுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கி அச்சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே திணைக்களத்தின் பிரதான நோக்கமாகும்" என்றார்.
இத்தீர்மானத்தின் ஊடாக நாட்டின் தொடர்ச்சியான மீன் விநியோகம், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் மேலும் உறுதிப்படுத்தப்படும்.





